குஜராத் முதல் கட்ட தேர்தலில் சாதனை வாக்குப் பதிவு
அகமதாபாத்: குஜராத்தில் நேற்று நடந்த முதல் கட்ட வாக்குப் பதிவின் இறுதியில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இது சாதனை அளவாகும்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 87 தொகுதிகளுக்கு நேற்று முதல் கட்டமாக தேர்தல் நடந்தது. விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு மாலையில் முடிவடைந்தது. இந்த வாக்குப் பதிவின்போது 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது ஒரு சாதனை அளவாகும். குஜராத்தில் இதுவரை இந்த அளவுக்கு வாக்குகள் பதிவானதில்லையாம். இதற்கு முன்பு குஜராத்தில் கலவரம் நடந்த 2002ல் நடந்த தேர்தலின்போதும் கூட 61.55 சதவீத வாக்குகள்தான் பதிவாகியிருந்தன. அதேபோல 2007ல் 59.77 சதவீத வாக்குகள்தான் பதிவாகியிருந்தன. இதுவரை அதிகபட்சமாக 1967 தேர்தலில் பதிவான 63.70 சதவீத வாக்குகள்தான் சாதனை அளவாக இருந்தது. தற்போது அதை முறியடித்துள்ளது இப்போதைய தேர்தல்.
முன்னாள் முதல்வரும், பாஜகவிலிருந்து பிரிந்து குஜராத் பரிவர்த்தன் கட்சியைத் தொடங்கி சவுராஷ்டிர பகுதியில் நரேந்திர மோடிக்குப் பீதியைக் கொடுத்து வருபவருமான கேசுபாய் படேல் உள்ளிட்டோர் போட்டியி்ட்ட தொகுதிகளும் நேற்றைய வாக்குப் பதிவில் இடம் பெற்றிருந்தன.
நேற்று நடந்த வாக்குப்பதிவின்போது அசம்பாவிதமோ, வன்முறைச் சம்பவங்களோ இல்லை.
2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு டிசம்பர் 17ம் தேதி நடைபெறும். 20ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.












Click it and Unblock the Notifications