ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மது அருந்திய மாணவன்!
சென்னை: சென்னை அருகே ஆசிரியை வகுப்பை நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு பிளஸ்டூ மாணவன் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து குடித்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
பூந்தமல்லி அரசுப் பள்ளிக்கூடத்தில்தான் இந்தக் கொடும் செயல் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவன் ஏற்கனவே 2 முறை இப்படி மது அருந்தி பிடிபட்டுள்ளான். தற்போது 3வது முறையாக சிக்கியபோதும், அவனது எதிர்காலம் கருதி போலீஸார் கடும் எச்சரிக்கையுடன் அவனை திருப்பி அனுப்பியுள்ளனர்.
அந்த மாணவனின் பெயர் சசிக்குமார். 16 வயதான இவன் தனது வகுப்பில் குளிர்பானத்துடன் வந்திருந்தான். அடிக்கடி குளிர்பான பாட்டிலை எடுத்துக் குடித்தபடி இருந்துள்ளான். இதைப் பார்த்த ஆசிரியைக்கு பெரிதாக சந்தேகம் வரவில்லை. ஆனால் நேரம் ஆக ஆக மாணவனின் போக்கில் மாற்றம் தெரியவே ஆசிரியை சந்தேகமடைந்து அவனது அருகில் போய்ப் பார்த்தார். அப்போது மாணவன் கையில் இருந்த குளிர்பான பாட்டிலில் மது கலந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவனை தலைமை ஆசிரியரிடம் கொண்டு போய் நிறுத்தினார் ஆசிரியை. இந்த மாணவன் அடிக்கடி இதுபோல செய்வதால் இவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை வலியுறுத்தினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் போலீஸுக்குத் தகவல் கொடுத்து வரவழைத்து அவர்களிடம் மாணவனை ஒப்படைத்தார்.
போலீஸார் அரசு மருத்துவனைக்கு சசிக்குமாரை அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்து அவன் குடித்திருப்பதை உறுதிப்படுத்தினர். இருப்பினும் சசிக்குமார் மீ்து மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம், அவன் பிளஸ்டூ படித்து வருவதால். அவனது படிப்பும், வாழ்க்கையும் பாழாகி விடக் கூடாது என்பதற்காக அந்த மாணவனை போலீஸார் பெருந்தன்மையுடன் கடும் எச்சரிக்கை மட்டும் விடுத்து அனுப்பி விட்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவனின் சொந்த ஊர் மதுரையாம். பெற்றோர் அங்குதான் உள்ளனர். இங்கு தனது மாமா வீட்டில் தங்கிப் படித்து வருகிறானாம்.
எங்கே போகிறார்கள் மாணவர்கள், பெரும் கவலையாக இருக்கிறது...!












Click it and Unblock the Notifications