கிரானைட் கொள்ளை வழக்கு: பி.ஆர். பழனிச்சாமிக்கு 15 வழக்கில் ஜாமீன்!
மதுரை: தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளையில் சிக்கி சிறைக்குப் போன பி.ஆர்.பி. நிறுவன உரிமையாளர் பழனிச்சாமிக்கு 15 வழக்குகளில் ஜாமீன் கிடைத்திருக்கிறது.
மதுரை சுற்றுவட்டாரத்தில் அனுமதித்த அளவுக்கு அதிகமாக கிரானைட் வெட்டி எடுத்து அரசுக்கு ரூ16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்தார். இந்த அறிக்கை மீதான அரசின் நடவடிக்கையில் மதுரையை அடுத்த மேலூர் சுற்றுவட்டாரத்தில் செயல்பட்ட அத்தனை கிரானைட் நிறுவனங்களும் சட்டவிரோதமாக கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து பி.ஆர். பழனிச்சாமி குடும்பத்தினர், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் போடப்பட்டது. தலைமறைவாக இருந்த பி.ஆர். பழனிச்சாமி மட்டும் திடீரென சரணடைந்து சிறைக்குப் போனார். ஆனால் பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்களும் துரைதயாநிதி உள்ளிட்டோரும் பல மாதங்களாக தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில் பி.ஆர். பழனிச்சாமி மீது மொத்தம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 15 வழக்குகளில் விசாரணை முடிவடைந்துவிட்டது. தம் மீதான இந்த 15 வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை கீழ் நீதிமன்றங்கள் நிராகரித்துவிட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார் அவர்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இன்று பி.ஆர். பழனிச்சாமிக்கு 15 வழக்குகளிலும் ஜாமீன் கொடுத்தது. மேலும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் பழனிச்சாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications