மதுரை ஆதினமடம் இந்து சமய அறநிலையத்துறை வசமாகுமா?: நாளை தீர்ப்பு
மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரி நாதரை நீக்கிவிட்டு மடத்தை இந்து அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கக் கோரிய மனு மீதான தீர்ப்பு மதுரை மாவட்ட கோர்ட்டில் சனிக்கிழமை வெளியாக உள்ளது.
மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா நுழைந்ததில் இருந்தே சர்ச்சைகள் ஆரம்பித்து விட்டன. திடீரென்று ‘மதுரை ஆதினம் அறக்கட்டளை' தொடங்கப்பட்ட உடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அறநிலையத்துறை ஆணையர் தனபால் தாக்கல் செய்த அந்த மனுவில், ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில்தான் ‘‘மதுரை ஆதீனம் அறக்கட்டளை'' தொடங்கப்பட்டுள்ளது. இந்து அறநிலையத் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மடத்திற்கு சொந்தமான 2 சொத்துக்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.
ஆதினம் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த மனு மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதீனம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அரசு தரப்பு, இந்து அறநிலையத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் வழக்கு நீதிபதி குருவையா முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீனம் தரப்பு வக்கீல்களும், அரசு வக்கீல் தமிழ்ச்செல்வமும் அவர்கள் தரப்பு வாதங்களை எடுத்துக்கூறினர். அவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மதுரை ஆதீனத்தை நீக்கிவிட்டு மடத்தின் பொறுப்புகளை ஒப்படைக்கும்படி கோரி இந்து அறநிலையத்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சனிக்கிழமை ஒத்திவைத்தார்.
அறக்கட்டளை கலைப்பு
இதற்கிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தரப்பில் அதே கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் உருவாக்கிய மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுவிட்டது. அதனை மதுரை தெற்கு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தோம். தற்போது அறக்கட்டளை கலைக்கப்பட்ட நிலையில் அந்த பதிவை ரத்து செய்யும்படி சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனவே அவரும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவில் சார் பதிவாளரும், நித்தியானந்தாவும் மட்டும் எதிர்தரப்பாக சேர்க்கப்பட்டு இருந்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது, நித்தியானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த மனுவில் இந்து அறநிலையத்துறையையும் ஒரு எதிர்தரப்பாக சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக அரசு வக்கீல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை சனிக்கிழமை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications