அடித்த ஆந்திர போலீஸ்- நள்ளிரவில் போராட்டம் நடத்திய ரயில் டிக்கெட் பரிசோதகர்கள்
திண்டுக்கல்: சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய ஆந்திர போலீசாரைக் கைது செய்யக் கோரி நள்ளிரவில் போராட்டம் நடத்தியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
திருநெல்வேலியில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்டது. எஸ்.8 பெட்டியில் டிக்கெட் பரிசோதகர் அண்ணாமலை சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது டிக்கெட் எடுக்காத 3 பேர், தாங்கள் ஆந்திர மாநில போலீசார் என்று கூறியிருக்கின்றனர். அவர்களிடம் அடையாள அட்டையை பரிசோதகர் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் பரிசோதகரை ஆந்திர போலீசார் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு இரவு 10.50 மணிக்கு ரயில் வந்தடைந்தது. ஆந்திர போலீசார் என்று கூறிய 3 இளைஞர்களும் திண்டுக்கல் ரயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து ஆந்திர போலீசாரை கைது செய்யக் கோரி டிக்கெட் பரிசோதகர்கள் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலும் திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் இருந்த டிக்கெட் பரிசோதகர்களும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இப்போராட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதனால் சென்னை நோக்கி வந்த அனைத்து ரயில்களும் தாமதமாக புறப்பட்டன.












Click it and Unblock the Notifications