கேரளாவுக்கு டூருக்குப் போன இடத்தில் சில்மிஷம்... 2 ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார்
சிவகங்கை: கேரளாவுக்கு பள்ளிச் சுற்றுலா போன இடத்தில் தங்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக 2 ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து போலீஸார் இதுகுறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட 2 ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள அனுமந்தகுடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் கடந்த கல்வி ஆண்டில் கேரளாவிற்கு சுற்றுலாவிற்கு அழைத்து சென்றனர்.
சுற்றுலா சென்ற இடத்தில் பள்ளியின் விளையாட்டு ஆசிரியராக இருந்த வேதமாணிக்கம் என்பவர் ஒரு மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும், அதே பள்ளியில் விவசாய ஆசிரியராக பணிபுரியும் சீனிராஜன் 11-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி பால்ராஜ் குழுவினருடன் சென்று மாணவிகளிடம் தனித்தனியே விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார்களில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. இதையடுத்து இரண்டு ஆசிரியர்களும் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications