அமெரிக்கா: தாயை முதலில் சுட்டுக்கொன்று பிறகு பள்ளிக் குழந்தைகளை சுட்ட கொலைவெறியன்

அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்த நபர் தான் வைத்திருந்த செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள், 6 பெண்கள் பலியாகினர்.
பலியானவர்களில் 12 சிறுமிகள் மற்றும் 8 சிறுவன்கள் முதலாம் வகுப்பில் படித்தவர்கள். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று நியூடவுனுக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
குழந்தைகளை காக்கும் முயற்சியில் பள்ளியின் தலைமையாசிரியையும், மனோதத்துவ நிபுணரும் பலியாகினர். ஒரு ஆசிரியை மாணவர்களை ஜன்னல் வழியாக தப்பித்து ஓட வைத்துள்ளார். மேலும் ஒரு ஆசிரியை துப்பாக்கிச் சூடு முடியும் வரை மாணவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பலியானார். அவரின் பெயர் ஆடம் லான்சா(20). நியூடவுனில் வளர்ந்த அவரின் மாமா நியூ ஹாம்ப்ஷையரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். லான்சாவின் தாய் அதே பள்ளியில் பணியாற்றியவர் என்று கூறப்பட்டாலும் அது உறுதிபடுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் லான்சா ஏன் இப்படி கண்மூடித்தனமாக சுட்டார் என்பதும் தெரியவில்லை என்றனர்.
லான்சா .223 புஷ்மாஸ்டர் செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கி, 10 எம்எம் கிளாக் மற்றும் 9 எம்எம் சிக் சாயர் செமி ஆட்டமேட்டிக் ஆகிய துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளார். அவர் சுட்டதில் சிலரின் உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளது. லான்சா சுட்டதில் முதலில் அவரது தாய் நான்சி தான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை லான்சா தனது வீட்டில் தனது தாயின் முகத்தில் சுட்டு அவரைக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தனது தாயின் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவரது காரில் ஏறி அந்த பள்ளிக்கு சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications