கூடுதல் அபராதம் வசூலி்த்ததைக் கேட்ட அதிகாரிகளை தாக்கிய டிக்கெட் செக்கர் சஸ்பெண்ட்
சென்னை: ரயில் பயணிகளிடம் அதிக தொகை வசூலித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய விஜிலென்ஸ் அதிகாரிகளை அடித்து உதைத்த ரயில் டிக்கெட் பரிசோதகர் கருணாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறக்கும் படை பரிசோதகராக இருப்பவர் கருணாகரன்(48). அவர் எந்த ரயிலிலும் ஏறி பயணிகளிடம் பரிசோதனை செய்யலாம். இந்த நிலையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளை பிடிக்கும் போது அவர்களிடம் வசூலிக்கும் அபராத தொகைக்கு பில் கொடுப்பதில்லை என்றும், மொபைல் போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கருணாகரன் பறித்துச் செல்வதாகவும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு, தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து கருணாகரனின் நடவடிக்கைகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். மேலும் விஜிலென்ஸ் அதிகாரிகள் கவுதமன், ஸ்ரீதரன், கிரிதர், ஹரிசந்திரன் ஆகியோர் கருணாகரனிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் கருணாகரன் வசூலித்த அபராதத் தொகையில் 4,000 ரூபாய் அதிகம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கூடுதல் பணம் குறித்து விளக்கம் கேட்டு சென்ட்ரலில் உள்ள டிக்கெட் பரிசோதகர்கள் அறையில் கருணாகரனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன் விஜிலென்ஸ் அதிகாரிகள் நான்கு பேரையும் தாக்கினார். இதில் கவுதமன் உதடு கிழிந்து, ரத்தம் கொட்டியது. மற்ற மூவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த நான்கு பேரும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் கருணாகரன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கருணாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications