டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு… ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் அமளி

இன்று காலை மாநிலங்களவை தொடங்கிய போது, கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவைத் தலைவர் அன்சாரி இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு கேள்வி நேரத்தை நடத்த தொடங்கினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. எனவே அவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து அவை மீண்டும் தொடங்கியதும் இதே கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. கட்சி சார உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான ராம்ஜெத் மலானி டெல்லியில் தொடரும் பாலியல் சம்பவங்களுக்கு மாநகர காவல்துறை ஆணையரே காரணம் என்றும், அவரே ஒரு கிரிமினல் என்றும் கடுமையாக குற்றம்சாட்டினார். பின்னர் பேசிய உறுப்பினர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரணதண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் மக்களவையிலும் எதிரொலித்தது. மக்களவையில் பேசிய உறுப்பினர்கள் மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
டெல்லியில் முனிர்கா என்ற இடத்தில் ஞாயிறு இரவு ஓடும் பேருந்தில், 23 வயது இளம் பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றனர். அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications