ஏன் பலாத்காரம் செய்தோம்... போலீசிடம் குற்றவாளிகள் வாக்குமூலம்
டெல்லி: இளம்பெண்ணிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
கடந்த ஞாயிறன்று இரவு டில்லி முனிர்கா பகுதியிலிருந்து துவாரகா நோக்கி சென்ற பஸ்சில், தனது ஆண் நண்பருடன் பயணித்த பெண், 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். டிரைவரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜாலி டிரிப்
இந்நிலையில், சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையில் குற்றவாளி அளித்த வாக்குமூலத்தில், டிரைவர் ராம் சிங், தனது சகோதரரின் பேருந்தை எடுத்துக்கொண்டு தனது நண்பர்களுடன் ஜாலி டிரிப் கிளம்பியுள்ளார்.
பேருந்தில் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் மட்டுமே இருந்துள்ளனர். முனிர்கா ஸ்டாப் அருகே பேருந்து வந்த போது அங்கு இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த டிரைவர் அங்கு பேருந்தை நிறுத்தி, துவாரகாவிற்கு வருகிறீர்களா என்று கேட்டார்.
பாடம் கற்பிக்க முடிவு
இதனையடுத்து இளம் பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பேருந்தில் ஏறவே சில நிமிடங்களில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆண் நண்பரை, அந்த கும்பல் தாக்கவே, இதைத் தடுக்க இளம்பெண் கடுமையாக முயன்றுள்ளார். இதையடுத்து, கோபம் கொண்ட அந்த கும்பல் ஆண்நண்பரை விட்டுவிட்டு அந்த பெண்ணிற்கு சரியான பாடம் கற்பிக்க பாலியல் கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இவ்வாறு குற்றவாளி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பணம் பறித்த கும்பல்
அந்தக் கும்பல் இளம்பெண்ணை பேருந்தில் ஏற்றுவதற்கு முன்பாக, டில்லி ஆர்.கே. புரம் செக்டர் 4ல் கார்பென்டர் ஒருவரை பேருந்தில் ஏற்றி, அவரிடமிருந்து ரூ. 8 ஆயிரத்தை பிடுங்கிக்கொண்டு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அருகே பேருந்தில் இருந்து மிரட்டி இறக்கி விட்டுள்ளார்கள். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த நபர் தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.