சவீதா மரணம் எதிரொலி: கருக்கலைப்புக்கு அயர்லாந்து சட்ட அங்கீகாரம்
லண்டன்: இந்திய பெண் மருத்துவர் சவீதாவின் மரணத்தைத் தொடர்ந்து, கருக்கலைப்பு செய்துகொள்வதை அனுமதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும் என அயர்லந்து அரசு அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் அயர்லந்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த பல் மருத்துவர் சவீதா என்ற கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. ஆனால் கருக்கலைப்பு செய்ய அயர்லாந்து சட்டம் அனுமதிக்காததை காரணம் காட்டி அவருக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. இதனால் ரத்தத்தில் நோய்தொற்று ஏற்பட்டு அக்டோபர் 28ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
சவீதா மரணத்தைத் தொடர்ந்து அயர்லாந்து முழுவதும் கருக்கலைப்புக்கு ஆதரவான போராட்டம் நடைபெற்றது. கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு தற்போது அரசு பணிந்துள்ளது.
இதுபற்றி பேசிய அயர்லாந்து பிரதமர் எண்டா கென்னி, 2013ஆம் ஆண்டு தொடக்கத்தில் புதிய சட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார். பின்னர் படிப்படியாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அயர்லந்து அரசின் புதிய சட்டப்படி, கர்ப்பிணியின் உடல்நிலை இக்கட்டான நிலையில் இருந்தால் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதிக்கப்படும். கருக்கலைப்பு செய்வதை முறைப்படுத்தும் வகையில், மேலும் பல விதிமுறைகளை இயற்றவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications