அண்ணே நாளைக்கு உலகம் அழியப்போகுது….இன்னிக்கே பணத்தை பிடிங்க… சந்தோசமா இருங்க!
தர்மபுரி: டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பீதி பரவி வருவதால் தர்மபுரி அருகே ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து எல்லோருக்கும் விநியோகித்து வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாயன் காலண்டரில், 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதிக்குப் பின்னர் நாட்கள் குறிப்பிடப்படவில்லை என்பதால் அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்று உலகம் முழுவதும் பீதி பரவியுள்ளது.
சிலர் ஆங்காங்கே சொந்த பந்தங்களுடன் கூடி உணவருந்து வருகின்றனர். சிலர் கிடாய் வெட்டி கூட விருந்து வைக்கின்றனராம். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பரிகார பூஜைகளும், வீடுகளில் பெண்கள் 3 விளக்குகள் ஏற்றியும் உலகம் அழியக் கூடாது என சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஆர்.கோபிநாதம்பட்டியை சேர்ந்த கரும்பு வியாபாரி குழந்தைதம்பி (55), 21ம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்றும் அதனால் இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறி நேற்று வங்கியில் இருந்து 1 லட்சம் பணத்தை எடுத்து வந்து அப்பகுதி மக்கள் சிலரிடம் 1000, 2,000 என விநியோகம் செய்தார்.
நாளையோடு உலகம் அழியப் போகிறது. அதனால் நீங்களும் உங்கள் குழந்தைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். உலகம் அழிந்து விட்டால் நிறைவேறாத ஆசைகளால் ஆத்மா சாந்தியடையாது. எனவே உங்கள் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் என்று கூறி பணத்தை கொடுத்தாராம். ஒருவேளை 21ம் தேதி உலகம் அழியாவிட்டால் இந்த பணத்தை திருப்பி கொடுங்கள்' என்றும் வேறு கூறியுள்ளார் அந்த நபர்.
இந்த தகவல் பரவியதையடுத்து தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரை பார்க்க சென்றனர். அவர் கையில் இருந்து பணம் முழுவதையும் கொடுத்துவிட்டு எங்கேயோ எஸ்கேப் ஆகிவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications