தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இல்லாத ஊரே இல்லை: பாரிவேந்தர்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தலைநகர் டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்தபோது மிகவும் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செய்தி இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது. இது குறித்து கடந்த இரண்டு நாட்களாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பேசிய உறுப்பினர்கள் அனைவரும் இந்த பாலியல் பலாத்காரத்தை மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
குறிப்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வந்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்கு எழுதிய கடிதத்தில், நமது தாய், பிள்ளைகள், சகோதரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சியை நடத்தும் உயர்ந்த இடத்தில் உள்ள தலைவர் ஒருவரே இப்படி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் அளவிற்கு நாட்டில் சட்டம் ஒழுங்கு சிதைந்து சீர்கெட்டு கிடக்கிறது. இது ஏதோ டெல்லியில் மட்டுமே நடந்துவிட்ட ஒரு சம்பவமாக கருதாமல் நாடு முழுவதற்குமான தீய சக்திகளின் அடையாளமாக கருத வேண்டும்.
திரைப்படம், தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் வரும் சில காட்சிகள் மாணவர்களையும், இளைஞர்களையும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும் அளவிற்கு நச்சுக் கருத்துக்களின் விளை நிலமாக உள்ளது. எனேவ இந்த அனைத்து கொடுஞ்செயல்களுக்கும், வன்முறைகளுக்கும், சமூக விரோத நடவடிக்கைகளுக்கும் ஆதார காரணமாக இருப்பது மதுவே. குறிப்பாக தமிழ்நாட்டில் அரசே மதுபானக் கடைகளை நடத்தத் தொடங்கியதில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு சமூக அந்தஸ்து கிடைத்துவிட்டது.
ரேஷன் கடைகள் இல்லாத ஊர்களைக் கூட காட்டிவிட முடியும், ஆனால் டாஸ்மாக் கடைகள் இல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவிற்கு எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது.
அரசுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி வருவாயை பெற்றுத் தரும் காமதேனுவாக இந்த கடைகள் உள்ளது என கூறப்படுகிறது. கண்ணை விற்று சித்திரம் வாங்குவதைப் போல பல குடும்பங்களை அழித்துவிட்டு, நலத்திட்டங்கள் என்கிற பெயரில் அரசு செய்கிற காரியங்கள் தேவை தானா
எனவே, அனைத்து சமூக விரோத காரியங்களுக்கும் மூலகாரணமாய் இருக்கும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்து அதன் வேலை நேரத்தையும் குறைக்க தமிழக அரசு முன் வரவேண்டும். இதனால் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு குறைவதோடு - சட்ட விரோத நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
ஆகவே தமிழக அரசு மக்கள் நலனை முன்னிட்டு இந்த நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications