தமிழகத்தில் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படும் நிலை - விஜயகாந்த்

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக கலெக்டர்கள் மாநாடு, போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நடத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் கூறி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பள்ளிக்கூடத்துக்கு பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கே பயமாக உள்ளது என்று கூறும் சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை மேற்கூறிய சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
பொதுவாக குற்றம் செய்பவர்கள் எதற்கும் அஞ்சாத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. இதன் விளைவுதான் நாள்தோறும், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் இங்கு நடக்கின்றன. இந்த விஷயத்தில் டெல்லிக்கு சளைத்ததல்ல தமிழகம் என்பதுதான் உண்மை.
எதிர்க்கட்சிகளை அடக்கக் காட்டும் அக்கறையை, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், முன்னேற்றத்திலும் தமிழக அரசு காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்," என்று கோரிக்கை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications