கென்யாவில் மாடு மேய்ப்பதில் பயங்கர மோதல்: 7 குழந்தைகள் உள்பட 39 பேர் பலி
கென்யாவில் பொகோமா என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த விவாசயிகள் மற்றும் ஆர்மா பழங்குடியினருக்கு இடையே மாடு மேய்ப்பது, விவசாய நிலம் மற்றும் தண்ணீர் ஆகிய விவகாரங்களில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடந்த மோதலில் 6 பெண்கள், 13 குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொகோமா பழங்குடியினர் ஆர்மா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் கிபாவ் கிராமத்திற்கு சென்று தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் தாக்குதல் நடத்த வருவதை எதிர்ப்பாத்த ஆர்மா பழங்குடியினர் பதிலுக்கு தாக்கினர். இந்த மோதலில் 7 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர். மேலும் 45 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த மோதலில் பலர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவரின் கை துண்டானது.
மாடு மேய்ப்பது தொடர்பாக இந்த பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவதால் இப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் அஞ்சுகின்றனர்.