சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீவிபத்து -ஒருவர் பலி
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ளது குளகத்தாகுறிச்சி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்து தலைவர் அமுதா பாலசுப்பிரமணியம். இவர் வினாயகா மேட்ச் பேக்டரி என்ற தீப்பெட்டித் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
இங்கு இன்று காலை மூன்று பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். 60 வயதான ராஜம்மாள் என்ற மாற்றுத்திறனாளிப் பெண்மணி, தீப்பெட்டிக் குச்சிகளை உருவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டதில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் ராஜம்மாள் மாட்டிக் கொண்டார். அவரால் நடந்து வர முடியாது என்பதால் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற இரு தொழிலாளர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications