ராஜ் தாக்கரேவுக்கு ரோஸ் கொடுத்த கான்ஸ்டபிளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு இல்லை
மும்பை: கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மும்பையில் நடந்த பேரணியின்போது மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை ரோஜாப்பூ கொடுத்த வரவேற்ற கான்ஸ்டபிளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வே கிடையாது.
மும்பையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் பேரணி நடந்தது. இறுதியில் ஆசாத் மைதானத்தில் அந்த கட்சியின் கூட்டமும் நடந்தது. அன்றைய தினம் கான்ஸ்டபிள் பிரமோத் தவாதே காலை 11 மணிக்கு தான் பணிக்கு வந்துள்ளார். மேலும் ஒரு மணிநேரத்தில் காவல் நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டார்.
மதிய நேரத்தில் அவர் ஆசாத் மைதானத்திற்கு சென்றதோடு மட்டுமல்லாமல் மேடையில் ஏறி நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு ரோஜாப்பூ கொடுத்து வாழ்த்தினார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான விசராணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையின் இறுதியில் போலீசாரைத் தாக்கிப் பேசிய ராஜ் தாக்கரவுக்கு ரோஜாப்பூ கொடுத்த தவாதேவுக்கு 2012, 2013 மற்றும் 2014 ஆகிய மூன்று ஆண்டுகள் ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி மும்பை ஆசாத் மைதானத்தில் அஸ்ஸாம் வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசை கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் முன்னெச்சரிக்கையுடன் நடக்காததால் தான் வன்முறை வெடித்தது என்று ராஜ் தாக்கரே குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications