ஷீலா தீட்சித் புகார் எதிரொலி .. பலாத்காரப் பெண்ணிடம் 2வது முறையாக வாக்குமூலம் பெற்ற மாஜிஸ்திரேட்
நாட்டையே அதிர வைத்த டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் போலீஸார் தற்போது குற்றப்பத்திரிக்கையை இறுதி செய்யும் நிலையை நெருங்கியுள்ளனர். இந்த நிலையில், டெல்லி போலீஸாருக்கும், முதல்வர் ஷீலா தீட்சித்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறை மத்திய அரசின் உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. இந்த நிலையில் ஷீலாவுக்கும், காவல்துறைக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் பாலியல் பலாத்கார வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண்ணிடம், மாஜிஸ்திரேட் ஒருவர் வாக்குமூலம் பெற்றார். சப்தர்ஜங் மருத்துவமனைக்குச் சென்று அவர் வாக்குமூலம் பெற்றபோது, உடன் இருந்த போலீஸார், தனக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்து கொண்டதாகவும், தாங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்குமாறு அப்பெண்ணை வற்புறுத்தியதாகவும் அந்த மாஜிஸ்திரேட் புகார் கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் ஷீலா தீட்சித் இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு கண்டிப்பான கடிதம் எழுதினார். விசாரணையில் போலீஸார் தலையிட்டு குறுக்கீடு செய்வதாகவும், இதில் தலையிட்டு சரி செய்யுமாறும் அவர் ஷிண்டேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.
ஆனால் டெல்லி காவல்துறை ஆணையர் நீரஜ் குமார் இதை மறுத்தார். மேலும் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் உஷா சதுர்வேதி பொய் பேசுவதாகவும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது பலாத்கார பாதிப்புக்குள்ளான பெண்ணிடம் 2வது முறையாக வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இந்த வாக்குமூலத்தை பெருநகர மாஜிஸ்திரேட் ஒருவர் பதிவு செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
முதல் வாக்குமூலம் டிசம்பர் 21ம் தேதி பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிண்டேவுக்கு டெல்லி கமிஷனர் திடீர் கடிதம்
இந்த நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவுக்கு ஒரு விளக்கக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதில் டெல்லி காவல்துறையினர், மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றபோது குறுக்கீடு செய்ததாக முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ள புகாரை அவர் மறுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும், டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகளின் அவசரக் கூட்டமும் இன்று கூட்டப்பட்டுள்ளது.