மும்பையில் மாஜி. காதலன் கத்தியால் குத்தியதில் கல்லூரி மாணவி பலி
மும்பை: மும்பையில் முன்னாள் காதலானால் கத்தியால் குத்தப்பட்ட 19 வயது கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மும்பையில் உள்ள சேத்தனா கல்லூரியில் படித்தவர் பாயல் பல்சாரா(19). அவருடன் படித்தவர் நிகில் பங்கர்(22). பாயல் ஒரு காலத்தில் நிகிலை காதலித்துள்ளார். ஆனால் பெற்றோர் எதிர்க்கவே அவர் நிகிலைப் பிரிந்துள்ளார். இதையடுத்து நிகில் பாயலுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலை பாயல் தனது தோழிகளுடன் வகுப்புக்கு சென்று கொண்டிருக்கையில் நிகில் அவரைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நிகில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாயலை பலமுறை குத்தினார். பிறகு தன்னைத் தானே 4 முதல் 5 தடவை வரை குத்திக் கொண்டதோடு தனது கழுத்தை அறுத்துக் கொண்டார் நிகில்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாயலை பந்த்ரா பகுதியில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நிகில் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். பாயலுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேந்திர சர்மா கூறுகையில்,
பாயலை காப்பாற்ற நாங்கள் கடந்த 3 நாட்களாக போராடினோம். அவரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவரது ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்தது. அதை சரி செய்ய முதலில் அறுவை சிகிச்சை செய்தோம். அதன் பிறகு அவரது குடலின் இரு பகுதிகளை நீக்க வேண்டியதாகிவிட்டது. பின்னர் அவரது ஈரல் பகுதியில் ஏற்பட்டிருந்த சேதத்தை சீர் செய்தோம். அவரது இரு கைகளிலும் பலத்த காயம் இருந்தது என்றார்.