கொல்கத்தாவில் பேருந்தில் 40 வயது மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர்
கொல்கத்தா: கொல்கத்தாவில் டிப்போவில் நின்று கொண்டிருந்த பேருந்தில் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளி பெண்ணை கற்பழிக்க முயன்றவரை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி சீரழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கையில் கொல்கத்தாவில் பேருந்தில் வைத்து ஒரு பெண்ணை கற்பழிக்க முயற்சி நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள பஸ் டிப்போவில் நின்று கொண்டிருந்த பேருந்தில் 40 வயது மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 28 வயது வாலிபர் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி கற்பழிக்க முயன்றார். அப்போது அந்த பெண் அலறிய சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் ஓடி வந்து அந்த வாலிபரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆனால் அந்த வாலிபர் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் தப்பியோடி 36 மணிநேரம் ஆகியும் போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தாங்கள் அந்த வாலிபரை போலீசாரிடம் ஒப்படைத்தபோது அவர்கள் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டினர்.