பெங்களூர் கோர்ட்டில் சுதாகரன் ஆஜர்.. 143 கேள்விளுக்குப் பதிலளித்தார்
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆஜராகி நீதிபதி பாலகிருஷ்ணா கேட்ட 143 கேள்விகளுக்குப் பதிலளித்தார்.அவரிடம் மொத்தம் 800க்கும் மேலான கேள்விகளை நீதிபதி கேட்கவுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதகாரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது ஒவ்வொருவரிடமும் கேள்விகள் கேட்டு பதில் வாங்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா, ஏற்கனவே நீதிபதி கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சசிகலாவிடம் கடந்த 19ம் தேதி முதல் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நீதிபதியின் 1,032 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
இந் நிலையில் இன்று சுதாகரன் நீதிபதி பாலகிருஷ்ணா முன் ஆஜரானார். அவரிடம் 143 கேள்விகள் கேட்கப்பட்டன. நீதிபதி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு சுதாகரன் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார். இவற்றில் பெரும்பாலான கேள்விகள் மிடாஸ் நிறுவனத்துக்கு நிலம் வாங்கியது தொடர்பானவையாகும். அவரிடம் மொத்தம் 800க்கும் மேலான கேள்விகள் கேட்கப்படவுள்ளன.
நாளையும் சுதாகரனிடம் கேள்விகள் கேட்கப்படவுள்ளன.