எப்பத்தான் ரித்தீ்ஷ்- தங்கவேலன் சண்டைக்கு முடிவு வருமோ, மறுபடியும் வெட்டுக் குத்து!
பரமக்குடி: திமுக எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் மற்றும் சுப தங்கவேலன் ஆகியோருடைய ஆதரவாளர்களுக்கிடையே நடந்து வரும் மோதல்களுக்கு அளவே இல்லாமல போய் வருகிறது. பரமக்குடியில் மீண்டும் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள திமுக தேர்தல் அதிகாரியான ஆலந்தூர் பாரதி, பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார்.
இந்த விடுதியின் உரிமையாளர் கிருஷ்ணன். இவர் அந்தமான் மாநில தி.மு.க. தலைவராக உள்ளார். இந்த விடுதியில், நேற்று மாலை விடுபட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு கோஷ்டியினர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர்.
தகராறின்போது நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. இதில் லாட்ஜ் கண்ணாடிகள் உடைந்தன. பின்னர் அங்கிருந்து வெளியேறிய கும்பல், வாசலில் நின்ற, முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் மகன் செந்தில் கார் மீதும் தாக்குதல் நடத்தியது. இதில் கார் கண்ணாடிகள் நொறுங்கின.
இந்த சம்பவங்கள் குறித்து பரமக்குடி போலீசில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டன. சுப.தங்கவேலனின் மகன் செந்தில் கொடுத்த புகாரில், கார் மற்றும் எஸ்.டி.டி. பூத் மீது நடந்த தாக்குதலில் ரூ.2 லட்சம் சேதம் அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணனின் மருமகன் கருணாநிதி கொடுத்துள்ள புகாரில், கண்ணாடிகள் உடைக்கப்பட்டதில் ரூ.1 லட்சம் சேதம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கும்பலாக நுழைந்தவர்களை தடுத்தபோது, உரிமையாளர் கிருஷ்ணனிடம் இருந்து 25 பவுன் நகை பறிக்கப்பட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ரித்தீஷ் எம்.பி. உதவியாளர் நாகராஜன் உள்பட 20 பேர் மீது பரமக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இவர்களது சண்டையால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் பெரும் தர்மசங்கடத்திலும், கடும் அதிருப்தியிலும் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications