''இவன் பாலியல் குற்றவாளி'': இனி பெயர், போட்டோவுடன் நெட்டில் போடப் போகிறார்கள்
டெல்லி: திருடர்கள் ஜாக்கிரதை என்று பொது இடங்களில் பெயரும், புகைப்படமும் ஒட்டப்பட்டிருப்பதைப் போல இணையதளத்தில் பாலியல் குற்றவாளிகளின் பெயரும் புகைப்படமும் இடம்பெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு, மேற்குவங்காளம், உள்ளிட்ட மாநிலங்களிலும் பாலியல் சம்பவங்கள் வெளியானது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனைகளை கடுமையாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது. ஒரு தரப்பினர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, மத்திய அரசு இந்த விவகாரத்தில் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, நாடு முழுவதும் ஏற்கெனவே பலாத்கார வழக்கில் சிக்கித் தண்டனை பெற்றவர்களின் பெயர், முகவரியுடன் அவர்களது புகைப்படத்தையும் இணைய தளத்தில் வெளியிட,மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக இதனை டெல்லியில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை இணைய தளத்திலும் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இதற்கான விவரங்களை சேகரித்து தருமாறு தேசிய குற்ற ஆவணக் கழகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி. என். சிங் டெல்லியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications