புத்தாண்டு பார்ட்டி: 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்கேற்க கூடாது… சிவசேனா எச்சரிக்கை
புனே: புனே நகரில் நடைபெறும் புத்தாண்டு பார்ட்டிகளில் 18 வயதிற்கும் குறைவானர்கள் பங்கேற்க ஸ்டார் ஹோட்டல்கள், பொழுதுபோக்கு மையங்களில் அனுமதிக்கக் கூடாது என்று சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.
புத்தாண்டு பிறப்பை ஒட்டி டிசம்பர் 31ம் நாள் நள்ளிரவு நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் களைகட்டியிருக்கும். இதில் நடிகர் நடிகையர்கள் பங்கேற்கும் நடன நிகழ்ச்சிகளும், மது விருந்தும் நடைபெறும் இளையதலைமுறையினர் மட்டுமல்லாது ஆயிரக்கணக்கானோர் இந்த பார்ட்டியில் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், புனே நட்சத்திர ஹோட்டல்களில் இந்த வருடம் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று சிவசேனா எச்சரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்த சிறுவர் சிறுமிகளை புனேயை சுற்றியுள்ள ஹோட்டல்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் அனுமதிக்கக்கூடாது என்று சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து போராட்டம் எழுந்துள்ளன. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த அறிக்கை ஒன்றை புனே கலெக்டருக்கு சிவசேனா கட்சி சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அக்கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்காணிக்க வேண்டும். இந்த கொண்டாட்டங்களுக்கான அனுமதியை வழங்குகிறபோது அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் சிவசேனா கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications