திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் அடிதடி!
திருச்சி: திருச்சி மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே இன்று அடிதடி நடந்தது. இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
காவிரி நீர் விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்தும், திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தும் இன்று மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
''இந்த விவகாரத்தில் அம்மா மாண்புமிகு புரட்சித் தலைவி பெரும் முயற்சி எடுத்து, பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் தமிழகத்துக்கு காவிரியில் நீர் பெற்றுத் தந்தார். ஆனால், திமுகவோ மத்திய அரசுடன் கைகோத்துக் கொண்டு, தமிழக நலனுக்கு எதிராக வேலை செய்கிறது. எனவே, முதல்வருக்கு இந்த மன்றத்தில் பாராட்டு தெரிவித்தும், திமுகவுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது'' என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்றத்தில் முன் இருக்கைகளை நோக்கி வந்தனர். அதே போல அதிமுகவினரும் வந்தனர். இரு தரப்பினரும் தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அது அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டு அடித்துக் கொண்டனர்.
இதையடுத்து திமுகவினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications