'சத்தியத்திற்காக' தீக்குளித்த பெண் பலி: 5 பேர் உடல் கருகியது
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக தீக்குளித்த பெண் மரணமடைந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற ஐந்து பேரின் உடல் கருகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புதிய பூபதி நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ் (62). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி எலிசபெத் (58). இவர்களுக்கு மேரி ஜாக்குலின் (33) என்ற மகளும், சார்லஸ் (32), ஜான்சன் (28), சார்ட்டீஸ் (23) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சார்லசுக்கு நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் திடீரென்று நின்று போனது. இதற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த புஷ்பா என்ற பெண்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து நேற்று இரவு புஷ்பாவை சந்தித்த ஜார்ஜ் குடும்பத்தினர், சார்லஸ் திருமணம் நின்று போனதற்கு நீதான் காரணம் என்று புஷ்பாவைக் குற்றம் சாட்டினர். இதற்கு மறுத்த புஷ்பா திருமணம் நிற்பதற்குக் காரணம் நான் காரணம் இல்லை என்று சத்தியம் செய்தார். அதை நிரூபிக்க தீக்குளிக்கிறேன் என்று அழுதபடி வீட்டிற்குள் சென்ற புஷ்பா, அங்கிருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜார்ஜ் குடும்பத்தினர் புஷ்பாவை காப்பாற்ற முயற்சித்தனர். புஷ்பாவின் கணவரும், மனைவியை காப்பாற்ற ஓடி வந்தார்.
அதற்குள் வீடும் தீப்பிடித்துக் கொண்டது. காப்பாற்ற முற்பட்ட ஜார்ஜ், அவரது மனைவி எலிசபெத், மகன் ஜான்சன், மகள் மேரி ஜாக்குலின் ஆகிய நான்கு பேர் மீதும் பிடித்துக்கொண்டது. புஷ்பாவின் கணவரும் தீயில் சிக்கிக்கொண்டார்.
இந்த விபத்தில் புஷ்பா உள்பட 6 பேர் உடல் கருகி உயிருக்கு போராடினார்கள். அனைவரும் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். தீயில் கருகிய புஷ்பா சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். மற்றவர்கள் பலத்த காயத்தோடு ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்த சம்பவம் கீழ்பாக்கம் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications