பலாத்கார வழக்கு.. சிறப்பு அரசு வக்கீலாக தயன் கிருஷ்ணன் நியமனம்-ஹெட்லியை விசாரித்தவர்!

மூத்த வழக்கறிஞரான கிருஷ்ணன், பெங்களூர் தேசிய சட்டப் பள்ளியில் படித்தவர் ஆவார். தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் கிருஷ்ணன்தான், டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை அரசு சார்பில் கையாளப் போகிறார். இந்த வழக்கை முழுவதும் இலவசமாகவே நடத்த முன்வந்துள்ளார் கிருஷ்ணன். இதற்காக ஒரு பைசா கூட தனக்குக் கட்டணமாக தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் ஆஜராக அவராகவே விருப்பமும் தெரிவித்திருந்தார் கிருஷ்ணன் என்று டெல்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் தர்மேந்திர குமார் கூறியுள்ளார்.
டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு ஓடும் பேருந்தில் பாரா மெடிக்கல் மாணவி ஒருவரை ஒரு கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்து படுகாயப்படுத்தி பாலத்தில் தூக்கிப் போட்டது. மிகவும் மோசமான நிலையில் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அந்த மாணவி சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல் நிலை மோசமானதால் அவரை சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில்தான் தற்போது டெல்லி காவல்துறை சார்பில் தயன் கிருஷ்ணன் ஆஜராகவுள்ளார்.
இந்த வழக்கில் மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6வது நபர் 18 வயதுக்கு உட்பட்டவர் என்பதால் அவர் மீது தனியாக சிறார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். ஜனவரி 3ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. ஐந்து பேருக்கும் கடுமையான தண்டனை வாங்கித் தர உறுதியுடன் இருப்பதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் மீது கொலை வழக்கும் கூடுதலாக சேர்ந்துள்ளது.
விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.விரைவில் ஐந்து பேருக்கும் தண்டனை வாங்கித் தர முயலப் போவதாக சிறப்பு போலீஸ் கமிஷனர் தரமேந்திர குமார் கூறினார்.
தயன் கிருஷ்ணன் தேசிய புலனாய்வு ஏஜென்சி, டெல்லி காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் வழக்குகளில் ஆஜராகியுள்ளார். ஹெட்லியை விசாரிக்க அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட குழுவில் இவரும் முக்கிய உறுப்பினராக இடம் பெற்றிருந்தார். ரபல முக்கிய வழக்குகளிலும் இவர் ஆஜராகி திறம்பட வாதாடியவர் ஆவார்.












Click it and Unblock the Notifications