டெல்லி பலாத்கார குற்றவாளி வீடு மீது குண்டு வீச வந்தவர் கைது- இருவர் ஓட்டம்
டெல்லி: டெல்லியில் இளம் பிசியோதெரப்பி மாணவியை ஓடும் பஸ்சில், பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்குக் காரணமானவர்களில் ஒருவரான பஸ் டிரைவர் ராம் சிங்கின் வீடு மீது வெடிகுண்டு வீச வந்தவர்களில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பஸ்சில் இளம் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்து சாலையில் தூக்கி வீசியது. இதில் அந்த மாணவி கடும் காயமடைந்தார்.பெரும் உயிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவரது வாழ்க்கை சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் மருத்துவமனையில் முடிந்து போனது.
இந்தக் கொடுமையான சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் ராம்சிங் உள்ளிட்ட 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ராம்சிங்கின் வீடு உள்ள ஆர்.கே.புரம் ரவிதாஸ் குடிசைப் பகுதிக்கு 3 பேர் வந்தனர். அங்கு ராம்சிங்கின் வீடு எங்குள்ளது என்று அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அப்பகுதி மக்கள் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டபோது, நாங்கள் வெடிகுண்டு வீச வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் அவர்களை சுற்றி வளைத்தனர். இதையடுத்து 2 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒரே ஒரு நபர் மட்டும் சிக்கினார். அவரிடமிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.












Click it and Unblock the Notifications