தமிழக அரசின் ஆலோசகரானார் தேவேந்திரநாத் சாரங்கி

1977-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவேந்திரநாத் சாரங்கி. ராமநாதபுரம், தென் ஆர்க்காடு மாவட்டங்களின் ஆட்சியராகப் பொறுப்பு வகித்தவர். பின்னர், அரசின் பல்வேறு துறைகளில் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் பணியாற்றியவர்.
பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளராக பணியாற்றிய அவர் கடைசியாக தலைமைச் செயலாளராக பதவி வகித்தார். டிசம்பர் 31ம் தேதி இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார். சாரங்கி விடைபெற்றார்.
இந்த நிலையில், ஒரு ஆண்டுக்கு தற்காலிக அடிப்படையில், சாரங்கியை அரசின் ஆலோசகராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சாரங்கி சந்தித்து ஆசி பெற்றார். அவருக்கு நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழக அரசின் ஆலோசகராக ஒருவர் பதவியேற்பது தமிழகத்தில் இது 2வது முறையாகும். இதற்கு முன்பு 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது தனது ஆலோசகராக குகனை நியமித்திருந்தார் கருணாநிதி என்பது நினைவிருக்கலாம். அப்போது குகனுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்து தரப்பட்டிருந்தது. தற்போது சாரங்கிக்கும் அதே அந்தஸ்தைத்தான் முதல்வர் ஜெயலலிதாவும் வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications