டெல்லி: பலாத்காரம் செய்து சாலையில் வீசி பஸ்ஸை ஏற்றி நசுக்க முயன்ற குற்றவாளிகள்
டெல்லியில் டிசம்பர் 16ம் தேதி இரவு தனது நண்பருடன் வீடு திரும்புவதற்காக பஸ்சில் பயணித்த பிசியோதெரப்பி மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் ஓடும் பஸ்சில் வைத்து கொடூரமாக தாக்கியது. பின்னர் அந்த மாணவியை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரையும், அவரது நண்பரையும் பஸ்சிலிருந்து வெளியே தூக்கி வீசி விட்டனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அந்தப் பெண் மற்றும் அவரது நண்பர் மீது பஸ்சை ஏற்றி கொலை செய்யவும் முயன்றுள்ளனர். ஆனால் அப்பெண்ணின் நண்பர் மின்னல் வேகத்தில் அப்பெண்ணை தன் பக்கம் இழுத்ததால் அப்பெண் பஸ்சில் சிக்கி உயிரிழக்கும் அபாயத்திலிருந்து தப்பினாராம்.
இந்த கொடூரமான வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீஸார் தயாரித்துள்ளனர். 1000 பக்கம் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 6 குற்றவாளிகளும் நடந்து கொண்ட கொடூரமான விதம் குறித்தும், அப்பெண்ணின் போராட்டம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாலியல் பலாத்காரத்தின்போது தப்புவதற்காக 6 பேரில் 3 பேரை அப்பெண் பலமாக கடித்துள்ளார். இதுதொடர்பான அறிகுறிகள் அவர்களது உடலில் காணப்படுகிறது. அதை போலீஸார் தங்களது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று இரவு தெற்கு டெல்லியில் உள்ள முனிர்கா பஸ் நிறுத்தத்தில் இப்பெண்ணும், அவரது நண்பரும் பஸ் ஏறியுள்ளனர். அப்போது பஸ்சில் ஆறு பேர் அமர்ந்துள்ளனர். அவர்கள் பயணிகள் என நினைத்துள்ளனர். ஆனால் அந்த ஆறு பேரும் சேர்ந்துதான் இப்பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர்.
பஸ் நகரத் தொடங்கிய சிறிது நேரத்தில், அவர்கள் ஆறு பேரும் சேர்ந்து அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பரை முதலில் கடுமையாக தாக்கத் தொடங்கினர். பின்னர் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். பெண்ணும், அவரது நண்பரும் குற்றவாளிகளைத் தாக்கி தப்ப முயன்றதால் கோபமடைந்த குற்றவாளிகள் இரும்புக் கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் அப்பெண்ணை பஸ்சின் பின் பகுதிக்குக் கொண்டு சென்று ஒருவர் மாற்றி ஒருவராக பலாத்காரம் செய்துள்ளனர் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் 6 பேர் மீதும் கொலை, கொலை முயற்சி, கற்பழிப்பு, கடத்தல், கொள்ளை என வழக்குகள் பதிவாகியுள்ளன. குற்றப்பத்திரிக்கையில் 40 சாட்சிகள் வரை சேர்க்கப்பட்டுள்ளனர்.