கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்து ஐயப்ப பக்தர்கள் 7 பேர் படுகாயம்
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் ரெங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் குண்டுராவ். இவரது தலைமையில் 27 ஐயப்ப பக்தர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சபரிமலைக்கு இருமுடி கட்டி ஒரு வேனில் புறப்பட்டனர். சபரிமலையில் சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்றிரவு அவர்கள் ஊருக்கு கிளம்பியுள்ளனர்.
இன்று காலையில் கோவில்பட்டியை அடுத்துள்ள நாலாட்டின்புதூர் அருகே வேன் வந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் வேன் நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வேன் கவிழ்ந்ததில் ஜெயராம் (40), லாசர் (60), வடிவேல் (35), செல்வராஜ் (48), முருகேசன் (42), கார்த்திக் (17), கார்த்திகேயன் (30) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபத்து காரணமாக கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications