காவிரி பாசன பகுதிகள் பட்டியலில் இருந்து கடலூர் மாவட்டத்தின் 32 கிராமங்கள் திடீர் நீக்கம்: ராமதாஸ்
சென்னை: கடலூரில் உள்ள 32 கிராமங்கள் தொடர்ந்து காவிரிப் பாசன மாவட்டங்களாக நீடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில், கீரப்பாளையம் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 32 கிராமங்கள் காவிரி பாசன பகுதிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக, விவசாயிகளிடம் கருத்து எதுவும் கேட்கப்படாத நிலையில் யாருடைய பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது எனத் தெரியவில்லை. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், காவிரி பாசனப் பகுதிகள் என்ற அடிப்படையில் இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 12 மணி நேர மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டு, தினந்தோறும் 3 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.
தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்திலிருந்தும் இந்த கிராமங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மின்சார பம்ப் செட்டுகளை பயன்படுத்த முடியாததால், கருகும் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தெரியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அப்பகுதியில் காப்பீட்டுத் திட்டமும் ரத்து செய்யப்பட்டு விட்டதால், ஒருவேளை பயிர்கள் கருகினால்கூட, அதற்காக இழப்பீடு எதையும் விவசாயிகளால் பெற முடியாது.
எனவே, இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்து, 32 கிராமங்களும் தொடர்ந்து காவிரி பாசன மாவட்டங்களாகவே நீடிக்கவும், அப்பகுதி விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மற்றும் பயிர்க் காப்பீடும் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பகுதிகளின் பாசனத்திற்காக பிப்ரவரி மாதம் வரை வீராணம் தண்ணீரை திறக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications