6ம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: வரும் 6ம் தேதி சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கடந்த மாதம் 31ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளான அகில இந்திய காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றும், அதிமுக தனித்து போட்டியிடும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் வரும் 6ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் தேர்தல் நிதி குறித்து விவரிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார். கூட்டத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றி திமுக முக்கிய பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தபோது, அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.