புத்தாண்டில் விடுதலையை நிலை நாட்டுவோம், எதிர்ப்பை கொண்டாடுவோம்: உதயகுமார்
இடிந்தகரையில் கடந்த 31ம் தேதி நடந்த புத்தாண்டு விழாவுக்கு அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது,
.
2012ம் ஆண்டு முடிவுறும் தருவாயில் சுதந்திரம், மனிதநேயம், எதிர்ப்புணர்வு ஆகியவற்றால் தன் சந்ததியினரை பாதிக்கின்ற அரசு முடிவுகளை எதிர்க்கும் மக்கள் போராட்டங்களுக்கு எங்கெல்லாம் தொய்வு ஏற்படுகின்றதோ அப்போது வீறுகொண்டு எழுந்து விடுதலையை நிலைநாட்ட வேண்டும். எனவே வரும் புத்தாண்டில் விடுதலையை நிலை நாட்டுவோம். எதிர்ப்பை கொண்டாடுவோம் என்றார்.
விழாவில் ஒடிசா, சத்தீஸ்கர், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் 200 பேர் மற்றும் இடிந்தகரை, கூடங்குளம், வைராவிகி்ணறு, கூட்டப்புளி, பெருமணல் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வாடி ஆன்ட் லோன் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒடிசாவின் பராம்பரிய இசைமெட்டை வாசி்த்து அனைவரையும் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பினைச் சேர்ந்த பீட்டர் பேசியதாவது, இந்தியாவில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள மக்கள் காவல் துறையினராலும், ராணுவத்தினராலும், சிறப்பு அதிரடிப்படையினராலும் நிரந்தர முற்றுகைக்கு உள்ளாகியுள்ளனர். உள்நாட்டு எதிர்ப்புணர்வை ஒடுக்குவதற்காக போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதே போன்று இடிந்தகரையிலும் தங்கள் வாழ்வாதரங்களுக்காக போராடும் மக்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து வழக்குகள் போடுவது வேதனைக்குரியது என்றார்.