டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு- 1000 பக்க குற்றப்பத்திரிக்கை 'பென் டிரைவ்' மூலம் தாக்கல்
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் 1000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீஸார் தயாரித்துள்ளனர். பென் டிரைவ் மூலம் இதை கோர்ட்டில் தாக்கல் செய்கின்றனர். அதன் பின்னர் இந்த வழக்கு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணையும் உடனடியாகத் தொடங்கும்.
குற்றப்பத்திரிக்கையை பென்டிரைவில் டெல்லி போலீஸார் தாக்கல் செய்கின்றனர். தகவல்கள் வெளியில் கசிந்து விடக் கூடாது என்பதற்காகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் இப்படி பென் டிரைவ் மூலம் குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தயாரித்துள்ளதாக தெரிகிறது.
இன்று சகேட் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிக்கை ஆவண வடிவிலும் தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மாஜிஸ்திரேட் இந்த வழக்கை நேற்று புதிதாகத் தொடங்கப்பட்ட விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுவார். அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை தொடங்கும்.
விரைவு நீதிமன்றத்தில் ஒரே மாதத்தில் வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குற்றப்பத்திரிக்கை மொத்தம் 1000 பக்கங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதில் நடந்த சம்பவம் முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 6 பேரின் விரிவான வாக்குமூலங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. 40 அரசுத் தரப்பு சாட்சியங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.
6 பேர் மீதும் கொள்ளை, கும்பலாக கற்பழித்தது, கொலை, சாட்சியத்தை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மரண தணட்னை தருமாறும் போலீஸ் தரப்பில் கோரப்பட்டுள்ளதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications