ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்டு இறந்த மாணவிக்கு அசோக சக்ரா வழங்க பாஜக கோரிக்கை
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் சீரழிக்கப்பட்டு இறந்த மருத்துவ படிப்பு மாணவியின் வீரத்தை பாராட்டும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா வழங்க வேண்டும் என்று பாஜகவின் டெல்லி பிரிவு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விஜேந்தர் குப்தா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
டெல்லியில் ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு இறந்த மாணவியின் தன்னம்பிக்கை மற்றும் வீரம் இந்த நாட்டையே ஆச்சரியப்பட வைத்தது. எனவே, அவரின் வீரத்தை பாராட்டும் வகையில் அவருக்கு நாட்டின் உயரிய விருதான அசோக சக்ரா விருதை குடியரசு தினத்தன்று வழங்கி கௌரவிக்க வேண்டும்.
நீரஜா பனோட்டுக்கு வழங்கியது போன்று டெல்லி மாணவிக்கும் அசோக சக்ரா விருது வழங்க வேண்டும். அம்மாணவியின் உடல் சிங்கப்பூரில் இருந்து வந்தபோது அங்கு இருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அவருக்கு அசோக சக்ரா விருது வழங்க வேண்டும் என்று விரும்பும் மக்களின் உணர்வை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பான் ஆம் ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்டஸாக இருந்த நீரஜா பனோட் அந்நிறுவனத்தின் விமானம் கடத்தப்பட்டபோது தீவிரவாதிகளிடம் இருந்து பயணிகளை காப்பாற்றும்போது கடந்த 1986ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி இறந்தார். அவருக்கு அப்போது 23 வயது தான். அவரது தீரத்தை பாராட்டி அவர் மறைவுக்கு பிறகு அவருக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது. மிக குறைந்த வயதில் அசோக சக்ரா விருது பெற்றது நீரஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications