அரசிதழில் நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசு வெளியிடுவதில் தாமதமாவது ஏன்?
டெல்லி: காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை டிசம்பர் மாதத்துக்குள் வெளியிடப் போவதாக மத்திய அரசு அறிவித்தும் இன்னமும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
1990-ம் ஆண்டு ஜூன் மாதம் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது இறுதி தீர்ப்பை வெளியிட்டது நடுவர் மன்றம். காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிட்ட நடுவர் மன்றம், அதில் தமிழ்நாட்டின் பங்காக 419 டி.எம்.சி. நீர் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு அரசிதழில் வெளியானால்தான் அடுத்த 90 நாட்களுக்குள் தீர்ப்பு அமலுக்கு வரும் என்பது சட்டம்.
ஆனால், தீர்ப்பு வெளியாகி 6 ஆண்டுகள் ஆன பிறகும், இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை. கடந்த மாதம் 7-ந் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், நடுவர் மன்ற தீர்ப்பை டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் தலைவரான நீர்வள அமைச்சக செயலாளர் தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஆனால், டிசம்பர் மாதம் முடிந்த பிறகும், நடுவர் மன்ற தீர்ப்பு, இன்னும் அரசிதழில் வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்குகளில் முடிவு காணப்படும்வரை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று ஒருதரப்பு கருத்து தெரிவித்துள்ளனர். இதனால்தான் மத்திய சட்ட அமைச்சகம் இறுதி முடிவு எடுக்க இயலாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications