சென்னையில் 'ஆபரேஷன் ஆம்லா" - தீவிரவாதிகள் போல ஊடுருவியோர் கைது!
சென்னை: சென்னையில் ஆபரேஷன் ஆம்லா என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போல ஊடுருவியோர் சிக்கியுள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க 6 மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு மாநிலத்திலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு. இதனடிப்படையில் சென்னை உள்பட தமிழகத்தில் ஏற்கனவே 4 முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது.
மீண்டும் இன்று காலை 6 மணியில் இருந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிரமாண்ட பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. 2 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்த ஒத்திகையில் தீவிரவாதிகள் வேடத்தில் கடலோர பாதுகாப்புப்படை வீரர்கள் ஊடுருவி வருவார்கள். அவர்களை போலீசார் மடக்கிப்பிடிக்க வேண்டும். இதுதான் இந்த பாதுகாப்பு ஒத்திகையின் முக்கிய அம்சமாகும்.
இந்த ஒத்திகையில் போலீசாரோடு இணைந்து கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடற்படையினர் இணைந்து செயல்படுகின்றனர். இந்த பாதுகாப்பு ஒத்திகைக்கு ஆபரேஷன் ஆம்லா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்காக இன்று காலையில் இருந்தே போலீசார் சென்னை மாநகர சாலைகளில் குவிக்கப்பட்டனர். தமிழக கடலோர பகுதிகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டன. இதன்படி போலீசார் சென்னையில் கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் வேடத்தில் ஊடுருவிய 8 பேர் பிடிபட்டனர். கானாத்தூர் பகுதியில் 4 பேரும், நீலாங்கரையில் 2 பேரும், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2 பேரும் போலீசில் சிக்கினர்.
சென்னையில் அனைத்து சாலைகளிலும் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. எழும்பூர், மெரினா கடற்கரை, சிந்தாதிரிப்பேட்டை, அண்ணாசாலை, பெரம்பூர், கொடுங்கையூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications