சிவகாசி அச்சகத்தில் பயங்கர தீ: பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம், கட்டிடம் சேதம்
சிவகாசி: சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நல்ல வேளையாக இதில் யாரும் உயிர் இழக்கவில்லை.
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மட்டுமின்றி ஏராளமான அச்சகங்களும் உள்ளன. அங்கு டைரி, காலண்டர், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை தயாரிக்கும் பணிகள் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக தமிழக அரசு வழங்கும் பள்ளி புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் பெரும்பாலும் சிவகாசியில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகாசி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்தில் நேற்று காலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சக விரிவாக்கப் பணியின் ஒரு கட்டமாக வெல்டிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. வெல்டிங் செய்யும்போது சிதறிய தீப்பொறி அங்கிருந்த குடோனில் பட்டது. தீப்பொறி பட்டதை யாரும் கவனிக்காததால் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் பேப்பர்கள் எரிந்தன.
தீ எரிவதைப் பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு அச்சகத்தைவிட்டு வெளியேறினர். முதல் மாடியில் இருக்கும் ஒரு அறையில் ராஜம் (வயது 52), சாரதா (28), மகாலட்சுமி (29) ஆகிய 3 பெண்கள் நோட்டு தயாரி்த்துக் கொண்டிருந்தனர். அவர்களால் அறையை விட்டு வெளியேற முடியவில்லை.
இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 5 மணிநேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். முதல் மாடியில் தீ மற்றும் புகையில் மாட்டிக் கொண்டு அலறிய 3 பெண்களையும் ஜன்னல் கம்பிகளை உடைத்து காப்பாற்றினர். அதற்குள் அச்சகத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் கட்டிடமும் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications