டெல்லி பலாத்காரம்: மைனர் சிறுவனின் வயதை நிர்ணயிக்க எலும்பு சோதனை
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் கைதாகியுள்ள 17 வயது சிறுவனின் வயதை உறுதி செய்ய அவனுக்கு எலும்பு பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான சோதனையை விரைவில் நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.
இந்த அறிக்கையை சிறார் நீதிமன்றத்தில் காவல்துறை சமர்ப்பித்து அச்சிறுவனின் உண்மையான வயது குறித்த விவரத்தையும் தெரிவிக்கும். அதன் பின்னரே இந்த வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுமா அல்லது வழக்கமான நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா என்பது தெரிய வரும்.
டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் இந்த சிறுவன்தான் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டான் என்பது போலீஸாரின் வாதமாகும். 2 முறை அப்பெண்ணை அவன் பலாத்காரம் செய்துள்ளான். கடுமையாகவும் தாக்கியுள்ளான். இவனுக்கு எலும்பு அடர்த்தி சோதனை செய்யப்படவுள்ளது. அதில் அவனது உண்மையான வயது தெரிய வரும்.
இதுவரை இந்த சோதனை செய்யப்படவில்லை. விரைவில் இதுதொடர்பாக சிறார் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் அனுமதி கோரி மனு செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications