'மிக்ஸிங்குக்கு' தண்ணீர் தர மறுத்த பெண்! தாக்கிய குடிகார கும்பல்! காப்பாற்ற போனவர் படுகொலை!!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் குடிகார கும்பல் ஒன்று மதுவில் கலக்க தண்ணீர் தர மறுத்ததால் பெண்ணைத் தாக்கியுள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட நபரை அக்கும்பல் அடித்தே கொலை செய்திருக்கிறது.
ராஞ்சியின் பரியது ஹவுசிங் காலனியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த பரத்வாஜ், சுவாமி சகஜானந்தா காலனி என்ற பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை அவர் புத்தாண்டு நாளன்று தமது நண்பர்களுடன் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டுக்கு எதிர் பகுதியில் சிறுவர்கள் சிலர் மதுபாட்டில்களை திறந்து வைத்துக் கொண்டு பக்கத்து வீட்டு பெண்ணிடம் மிக்ஸிங்கிற்காக தண்ணீர் கேட்டிருக்கின்றனர். முதலில் அப்பெண்ணும் தண்ணீரைக் கொடுத்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தண்ணீர் கேட்க அப்பெண் தர மறுத்திருக்கிறார்.
இதில் கடுப்பாகிப் போன அந்த கும்பல் அப்பெண்ணை கடுமையாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறது. இதைப் பார்த்த பரத்வாஜூம் அவரது நண்பர்களும் குடிகார கும்பலைத் தடுத்து அப்பெண்ணைக் காப்பாற்றியிருக்கின்றனர். அக்கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடியது.
பின்னர் சிறிது நேரம் கழித்து அக்கும்பல் மேலும் 10 பேரை அழைத்துக் கொண்டு வந்து பரத்வாஜையும் அவரது நண்பர்களையும் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறது. அக்கும்பலிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பக்கத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு பல முறை பரத்வாஜ் போன் செய்தும் பயனில்லை. தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த போலீசார், பரத்வாஜின் போன் அழைப்பு கிடைத்தது. ஆனால் நாங்கள் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளனர். மேலும் குடிகார கும்பலில் இருந்த சிறுவனை தாங்கள் கைது செய்திருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.