ராணுவ வீரரின் பாலியல் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்
பாட்னா: ராணுவ வீரர் உள்பட இரண்டு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்களிடம் இருந்து தப்பிக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துவிட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் திப்ரூகார்-டெல்லி செல்லும் பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ்
ரயிலில் நேற்று டார்ஜிலிங்கைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஏறியுள்ளார். அதே ரயிலில் பயணம் செய்த ராணுவ வீரர் உள்பட 2 ஆண்கள் அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ரயில் பீகார் மாநிலத்தில் உள்ள பிஹ்தா மற்றும் அரா ரயில் நிலையங்களுக்கு இடையே செல்கையில் அந்த இருவரிடம் இருந்து தப்பிக்க அப்பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இதற்கிடையே பக்ஸார் ரயில் நிலையம் வந்த அந்த ரயிலில் இருந்த ராணுவ வீரரை ரயில்வே போலீசார் பிற பயணிகளின் உதவியோடு கைது செய்தனர். மற்றொரு நபர் தப்பித்துவிட்டார்.
இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் வாங்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.