சாலை விபத்து.. தாய் கண் முன்னே சிறுமி தலை நசுங்கி பலி... ஸ்ரீவில்லிபுத்தூரில் பயங்கரம்
ஸ்ரீ வில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேராசிரியை மீது தனியார் பேருந்து மோதியதில் கண் எதிரிலேயே குழந்தை தலை நசுங்கி உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்திராநகர் அருகேயுள்ள அண்ணாநகரில் குடியிருந்து வருபவர் கவிதா (33). இவர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் துறையில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார். இவரது கணவரும் சென்னையில் பேராசிரியராக உள்ளார்.
இவர்களுக்கு பிரதிக்ஷா (4), ஹர்ஷிதா (3) என்ற இரு குழந்தைகள் உண்டு. இருவரும் கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் ப்ரிகேஜி படித்து வருகின்றனர். வழக்கமாக பள்ளிப் பேருந்தில்தான் இருவரும் பள்ளிக்குச் செல்வார்கள். இன்றைக்கு கவிதா, தன்னுடைய மூத்த மகள் பிரதிக்ஷாவை தன்னுடைய தனது இரு சக்கர வாகனத்தில் கூட்டிச் சென்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியில் பிரதிக்ஷாவை இறக்கிவிடுவதற்காக சென்ற கவிதா வாகனத்தை ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்கு திருப்பியுள்ளார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ், இரு சக்கர வாகனத்தின் பின்புறம் மோதியது. இதில் கீழே விழுந்த பிரதிஷாவின் தலையில் பஸ்ஸின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாயின் கண் எதிரிலேயே குழந்தை உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்துத் தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications