சொத்துக் குவிப்பு வழக்கு: துரைமுருகனின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
துரைமுருகன் திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது சொந்த ஊரான காட்பாடியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழி்பபு போலீசார் சோதனை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் இது குறித்து விளக்கம் கேட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி அவருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவர் தனது மனுவில், எனது மனைவி சாந்தகுமாரிக்கு வருமானம் உள்ளது. அவர் தனியாக வருமான வரி செலுத்துகிறார். ஆனால் லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது மனைவி குறித்த சொத்து கணக்கையும் ஒன்றாக கருதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இது தவறு. இதனை கவனிக்க தனி நீதிபதி தவறிவிட்டார். எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவு சரியானது தான் என்றும், அதில் தலையிட தாங்கள் விரும்பவில்லை என்றும் கூறி நீதிபதிகள் துரைமுருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.