கமுதி அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணை மகளுடன் கடத்திய அக்குபஞ்சர் மருத்துவர்
ராமநாதபுரம்: கமுதி அருகே சிகிச்சைக்கு வந்த பெண்ணை அக்குபஞ்சர் மருத்துவர் கடத்திச் சென்ற சம்பவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த வஹாப் மகன் முகமது ரபிபுல்லா கான்(33). கமுதியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ஹமிதா பானு(30). அவர்களுக்கு புரோஷ் நிஷா(8) என்ற மகளும், மகனும் உள்ளனர்.
தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த ஹமீதா பானு அக்குபஞ்சர் மருத்துவர் வேலாயுதம்(35) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வழக்கம்போல் சிகிச்சைக்கு சென்ற ஹமீதாவை அவரது மகளுடன் சேர்த்து மருத்துவர் கடத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரபிபுல்லா தனது மனைவி மற்றும் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.
உடனே அவர் இது குறித்து கமுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அபிராமம் சரகம் வடக்கூரைச் சேர்ந்த மருத்துவர் வேலாயுதத்தை வலை வீசித் தேடி வருகின்றனர்.
சிகிச்சைக்கு சென்ற பெண்ணை மருத்துவர் கடத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.