விடுதலை வேண்டும்... செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதம்
சிறப்பு முகாமில் இருந்து தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றவேண்டும் என்பது அங்குள்ள ஈழத்தமிழர்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் 23 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 12 பேரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது எனினும் மருத்துவமனையிலும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மீதமுள்ள 11 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தொடர்ந்து உண்ணா நிலையில் உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்தியா ஆகியோர் மருத்துவமனை சென்று சிகிச்சையில் உள்ள சிறப்பு முகாம் வாசிகளை சந்தித்துள்ளனர். இதன்பின்னர் தமிழக அரசு ஐந்து பேரை திறந்தவெளி முகாமிற்கு மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி செல்வம், செல்வராஜா, ரமேஷ், ஜெயபாலன், ரைசுதீன் ஆகியோர்கள் விடுதலை ஆகிறார்கள்.
இந்த 5 பேரை அரசு விடுதலை செய்தாலும் உண்ணா நிலையில் உள்ளவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. ஏனெனில் கடந்த காலங்களில் 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டனர். இப்போது 90 நாட்கள் ஆகியும் யாரையும் விடுதலை செய்யவில்லை என்பதால் தான் முகாம்வாசிகள் போராட்டத்தைத் தொடங்கினர்.
அரசு தற்போது 90 நாட்கள் கழித்து ஐந்து பேர்களை விடுதலை செய்வதை ஏற்க முடியாது, 10 பேர்களையாவது தற்போது விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருங்காலத்தில் வழக்கம் போல 45 நாட்களுக்கு ஒரு முறை ஐந்து பேர்களை விடுதலை செய்ய அரசு உறுதி அளிக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் நிரந்தரமாக விடுதலை செய்யக்கோரி உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்களில் தங்கள் கண்டன அறிக்கையை சமர்பிப்பதுடன், பல வகையான போராட்ட முன்னெடுப்புகளை எடுக்குமாறு வேண்டுகிறோம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications