தேனி கோர்ட்டுக்கு விஜயகாந்த் போகத் தேவையில்லை - உயர்நீதி்மன்றம் அனுமதி
சென்னை: தமிழக அரசின் அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக தேனி மாவட்ட நீதிமன்றத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி தேனியில் தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த் தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் அவதூறு செய்யும் விதத்தில் பேசியதாகக் கூறி தேனி மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 4-ம் தேதி அதாவது இன்று விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று தேனி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விஜயகாந்த் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தேனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டனர்.