5 சிறுமிகளை சீரழித்த கொடூரனுக்கு ரசாயண முறையில் ஆண்மை நீக்கம்: தென் கொரியா அதிரடி
சியோல்: சாட்டிங் மூலம் அறிமுகமான சிறுமிகளை மிரட்டி பலமுறை உறவு கொண்ட காமக்கொடூரனுக்கு ரசாயன ஆண்மை நீக்கம் செய்ய தென் கொரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் கயவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் அல்லது அவர்களுக்கு ஆண்மை நீக்க ஆபரேசன் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
டெல்லியில் கடந்த 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி மரணம் அடைந்தார். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. அதேசமயம் பாலியல் சம்பவங்களைத் தடுக்க சம்பவங்களைத் தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு ரசாயன ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது, அதிகபட்சமாக, மரணதண்டனை அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தென்கொரிய நீதிமன்றம் ஒன்று இத்தகைய அதிரடி தீர்ப்பு ஒன்றை நேற்று அளித்துள்ளது.
சாட்டிங் மூலம் மயக்கினான்
தென் கொரியாவில் பியோ என்ற குடும்ப பெயர் கொண்ட 31 வயது ஆண், ஸ்மார்ட்போன் சாட்டிங் மூலம் அறிமுகமான 5 சிறுமிகளை மயக்கி பாலியல் உறவு வைத்துள்ளார். பின்னர் அந்த சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுவிடுவதாகவும், வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி, நவம்பர் 2011 முதல் மே 2012 வரையிலான காலகட்டத்தில் தொடர்ந்து பலமுறை கட்டாய உறவில் ஈடுபட்டுள்ளார்.
குற்றவாளி கைது
இதனையடுத்து சிறுமிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பியோ மீது சியோல் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி கிம் கி-யங் நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.
ரசாயண ஆண்மை நீக்கம்
‘பியோ பல பெண்களை கற்பழித்துள்ளார். எனவே அவராகவே இந்த பாலியல் ஆசையைத் துறந்து திருந்துவார் என்பது சாத்தியமில்லை. எனவே, அவருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையும், ரசாயன ஆண்மை நீக்கம் செய்யவும் உத்தரவிடப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு அவர் 20 ஆண்டுகள் மின்னணு கண்காணிப்பு கொலுசு அணிந்திருக்க வேண்டும்' என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு
தென் கொரியாவில் குழந்தைகளை கற்பழிக்கும் குற்றத்திற்கு ஆண்மை நீக்கம் செய்யலாம் என்ற சட்டம் கடந்த 2011-ம் ஆண்டுதான் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications