சோனியாவும் ராகுல் காந்தியும் விமானப்படை விமானத்தை தவறாக பயன்படுத்தியதாக புகார்
டெல்லி: காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் பலமுறை விமானப்படை விமானங்களை பயன்படுத்தியது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், சமூக ஆர்வலர் ரமேஷ் வர்மா என்பவர், இந்திய விமானப்படை விமானத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் எத்தனைமுறை பயணம் செய்துள்ளார்? என்று தகவல் கேட்டிருந்தார்.
49 முறை பயணம்
இந்த கேள்விக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விமானப்படை சமீபத்தில் பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், "இதுவரை சோனியா காந்தி விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் 49 முறை பயணம் செய்துள்ளார். இவற்றில் 42 பயணங்களுக்காக கட்டணம் ஏதும் பெறப்படவில்லை. 6 பயணங்களுக்கான கட்டணத்தை, அந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்த அரசு துறைகள் செலுத்தியுள்ளன. கர்நாடக அரசு சார்பாக சோனியா காந்தி பயணித்த வகையில் ரூ.1.17 கோடி நிலுவையில் உள்ளது.
பிரதமருடன் 23 முறையும், நிதி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியாக பிரணாப் முகர்ஜி பதவி வகித்த போது அவருடன் 6 முறையும், பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணியுடன் 6 முறையும் சோனியா காந்தி விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் பயணம் செய்துள்ளார்.
3 ஆண்டுகளில் 8 முறை
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, விமானப்படையின் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் கடந்த 3 ஆண்டுகளில் 8 முறை பயணம் செய்துள்ளார். இதில் ஒரு பயணத்துக்கான கட்டணம் ரூ.8.26 லட்சத்தை அசாம் மாநில அரசு இன்னும் வழங்கவில்லை. மீண்டும் அசாம் மாநிலத்திற்கு ராகுல் காந்தி பயணம் செய்தது தொடர்பான ‘பில்' தயாரிக்கப்படவில்லை."என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை சட்டங்களின்படி பிரதமர் மட்டும்தான் அரசுமுறை சாராத பயணங்களுக்காக விமானப்படை விமானங்களை பயன்படுத்தலாம். பிரதமரின் அனுமதி பெற்று பயணிப்பவர்கள், தங்களுடன் பிறரை அழைத்துச் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சோனியாவும் ராகுல் காந்தியும் பலமுறை விமானப்படை விமானங்களை பயன்படுத்தியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications