டெல்லி பாலியல் பலாத்காரம்- 5 குற்றவாளிகளுக்கும் குற்றப்பத்திரிக்கை நகல்
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள 5 குற்றம் சாட்டப்பட்டோருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் இன்று வழங்கப்பட்டது.
டெல்லியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவனுக்கு வயது 17 என்று கூறப்படுவதால் அவனை மட்டும் வழக்கிலிருந்து பிரித்து சிறார் முகாமில் அடைத்துள்ளனர்.
மற்ற 5 பேர் மீதும் டெல்லி சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். இன்று இந்த வழக்கு நீதிபதி முன்பு வந்தது. அப்போது விசாரணையை ரகசியமாக நடத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மூடிய அறைக்குள் விசாரணை நடந்தது.
நீதிபதி முன்பு குற்றவாளிகள் 5 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜனவரி 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.